புணர்ச்சி

  • நிலைமொழியின் ஈற்றெழுத்தும் வருமொழியின் முதல் எழுத்தும்
    சேர்வது புணர்ச்சி எனப்படும். இவ்வாறு இருசொற்கள் சேரும்போது
    எவ்வித மாற்றமும் இன்றி, இயல்பாகச் சேர்வது இயல்புப்புணர்ச்சி.
(எ.கா) :
பொன் + வளையல் = பொன்வளையல்.
இருசொற்கள் சேரும்போது தோன்றல், கெடுதல், திரிதல் ஆகிய மாற்றங்கள் ஏற்படுமாயின் அவற்றை விகாரப்புணர்ச்சி என்பர்.
(எ.கா.) :
1 . வாழை + பழம் = வாழைப்பழம் – தோன்றல்.
2. மரம் + வேர் = மரவேர் – கெடுதல்.
3 . பொன் + குடம் = பொற்குடம் – திரிதல்.
திசைப்பெயர்ப் புணர்ச்சி, பண்புப்பெயர்ப் புணர்ச்சி, மகர ஈற்றுப்புணர்ச்சி ஆகியன.
திசைப்பெயர்ப் புணர்ச்சி : 
முதன்மைத் திசைகள் நான்கு. அவை கிழக்கு, மேற்கு, தெற்கு,
வடக்கு ஆகியன. திசைப்பெயர்களோடு திசைப்பெயரும், பிறபெயரும்
சேர்வது திசைப்பெயர்ப் புணர்ச்சி எனப்படும்.
(எ.கா.) :
1 . வடக்கு + கிழக்கு = வடகிழக்கு. 
2 . வடக்கு + மேற்கு = வடமேற்கு.
வடக்கு என்னும் நிலைமை கிழக்கு, மேற்கு என்னும்வருமொழிகளோடு சேரும்போது நிலைமொழியின் இறுதி எழுத்துகளான க், கு நீங்கிப் புணர்ந்தது.
(எ.கா.) :
3 . தெற்கு + மேற்கு = தென்மேற்கு.
4 . தெற்கு + கிழக்கு = தென்கிழக்கு
தெற்கு என்னும் திசைப்பெயரோடு மேற்கு, கிழக்கு என்னும்திசைப்பெயர்கள் சேரும்போது, நிலைமொழியின், இறுதியிலுள்ள கு நீங்கும், பிறகு றகர மெய் னகரமாகிப் புணரும்.
திசைப்பெயரோடு பிற பெயர்களின் புணர்ச்சி :
(எ.கா.) :
1 . வடக்கு + மலை = வடமலை.
இதில் நிலைமொழியின் இறுதி எழுத்துகளான க், கு ஆகியன இரண்டும் நீங்கிப் புணர்ந்தது.
2 . தெற்கு + திசை = தென்திசை.
இதில் நிலைமொழியின் இறுதியாகிய கு நீங்கியது, அதன் அயல்எழுத்தான ற் – ன் ஆகா மாறிப் புணர்ந்தது.
3 . கிழக்கு + நாடு = கீழ்நாடு.
இதில் நிலைமொழியின் இறுதியாகிய க்கு நீங்கி, ழ என்னும் உயிர்மெய்யில் (ழ் + அ) அகரம் நீங்கி, கி என்னும் முதல் எழுத்து கீ என நீண்டு
, கீழ் + நாடு = கீழ்நாடுஎனப் புணர்ந்தது.
4 . மேற்கு + நாடு = மேல்நாடு, மேனாடு.
  • நிலைமொழியில் கு, நீங்கியது. அதன் அயலெழுத்தான ற் – ல் ஆக
    மாறி மேல் + நாடு = மேல்நாடு எனவும், ற் – ன் ஆக மாறி
    மேல் + நாடு = மேனாடு எனவும் இருவகையில் புணர்ந்தன.
பண்புப்பெயர்ப் புணர்ச்சி :
  • நிறம், சுவை, அளவு, வடிவம் ஆகியன குறித்து வரும் சொற்கள்
    பண்புப் பெயர்களாம். செம்மை, சிறுமை, சேய்மை, நன்மை, இளமை,
    புதுமை போல்வனவும் இவற்றுக்குரிய எதிர்சொற்களும் இவைபோன்ற பிறவும் மையீற்றுப் பண்புப்பெயர்கள் எனப்படும்.
(எ.கா.) :
1 . கருவிழி = கருமை + விழி = கரு + விழி = கருவிழி.
  • ஈறுபோதல் என்னும் விதிப்படி நிலைமொழியின் இறுதி எழுத்து மை
    நீங்கிப் புணர்ந்தது.
2 . பெருமையன் = பெருமை + அன் = பெரு + அன், பெரி + அன் = பெரியன்.
  • ஈறுபோதல் என்னும் விதிப்படி நிலைமொழியின் இறுதி எழுத்து, மை
    நீங்கிப் பின் பெரு என்பதன் இறுதி உகரம் இடைஉகரம் இஆதல்
    என்னும் விதிப்படி பெரி யாகிப் பின் யகர உடும்படுமெய் பெற்றுப்
    பெரி + ய் + அன் என்பது உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே
    என்னும் விதிப்படி, ய் + அ + ய என்றாகிப் பெரியன் எனப் புணர்ந்தது.
3 . பாசிலை = பசுமை + இலை = பசு + இலை, பாசு + இலை.
பாச் + இலை = பாசிலை.
  • நிலைமொழி ஈறுகெட்டு ஆதி நீடல் என்னும் விதிப்படி, பாசு + இலை
    என்றாகியது. உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும், என்னும்
    விதிப்படி, பாச் + இலை என்றாகிப் பின், உடல்மேல் உயிர்வந்து
    ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி பாசிலை எனப் புணர்ந்தது.
4 . பைங்கூழ் = பசுமை + கூழ் = பசு + கூழ், பைசு + கூழ், பை + கூழ்,
பைங் + கூழ் = பைங்கூழ்.
  • ஈறுபோதல் என்னும் விதிப்படி மை நீங்கியது. (பசு + கூழ்) அடிஅகரம் ஐ ஆதல் எனும் விதிப்படி ப – பை ஆனது. இணையவும் என்னும் விதிப்படி உயிர்மெய் (சு) கெட்டது. இனமிகல் என்னும் விதிப்படி வருமொழியின் முதல் எழுத்தான  க் எழுத்துக்கு இனமான ங் மிகுந்து பைங்கூழ் எனப் புணர்ந்தது.
5 . சிற்றோடை = சிறுமை + ஓடை = சிறு + ஓடை, சிற்று + ஓடை,
சிற்ற் + ஓடை = சிற்றோடை.
  • ஈறுபோதல் என்னும் விதிப்படி மை கெட்டது. தன்னொற்று இரட்டல்
    என்னும் விதிப்படி பகுதியாகிய சிறு என்பதன் றகரம் இரட்டித்துச்
    சிற்று என ஆகியது. பின் உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்
    என்னும் விதிப்படி, உகரம் கெட்டு, ற் என்றாகியது. பின்னர் உடல்மேல்
    உயர் வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி வருமொழி உயிர்
    ஏறிப் புணர்ந்து சிற்றோடை என்றாயிற்று.
6 . சேதாம்பல் = செம்மை + ஆம்பல் = செம் + ஆம்பல், சேம் + ஆம்பல், சேத் + ஆம்பல் = சேதாம்பல்.
  • ஈறுபோதல் என்னும் விதிப்படி மை கெட்டு, செம் + ஆம்பல் ஆயிற்று.
    பின்னர் ஆதி நீடல் விதிப்படி = சேம் + ஆம்பல் ஆயிற்று, பின்
    “முன்னின்ற மெய் திரிதல்” என்னும் விதிப்படி மகரமெய் தகரமெய்
    ஆகத் திரிந்து சேத் + ஆம்பல் என்றாகி, உடல்மேல் உயிர்வந்து
    ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி சேதாம்பல் என்றாயிற்று.
7 . கருங்குயில் = கருமை + குயில் = கரு + குயில் = கருங்குயில்.
  • ஈறுபோதல் என்னும் விதிப்படி மை கெட்டது. இனமிகல் என்னும்
    விதிப்படி வருமொழி ககரத்திற்கு (கு) இனமான மெல்லெழுத்து
    ங் மிகுந்து, கருங்குயில் எனப் புணர்ந்தது.
மகரஈற்றுப் புணர்ச்சி :
  • மகர ஈற்றுச் சொற்கள் வருமொழியோடு சேரும்பொழுது, இறுதி
    மகரம் (ம்) கெட்டு, உயிரீறுபோல நின்று, உயிர்முதல் மொழியோடு
    உடம்படுமெய் பெற்றுப் புணரும்.
(எ.கா.) :
மரம் + அடி= மர + அடி, மர + வ் + அடி = மரவடி.
  • நிலைமொழியின் மகர ஈறுகெட்டு வருமொழி முதலில் உள்ள
    வல்லின எழுத்து மிக்குப் புணரும்.
(எ.கா.) :
வட்டம் + கல் = வட்டக்கல் எனப் புணரும்.
  • நிலைமொழியின் மகர ஈறு வருமொழி முதலிலுள்ள
    வல்லினத்திற்கு இனமான மெல்லினமாகத் திரிந்து புணரும்.
(எ.கா.) :
நிலம் + கடந்தான் = நிலங்கடந்தான்.
மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்
வன்மைக்கு இனமாய்த் திரிபவும் ஆகும்.
– நன்னூல்  219.

Comments

Popular posts from this blog

எதுகை,மோனை,இயைபு

அணி இலக்கணம் பொதுத்தமிழ் Tnpsc

பெயர்ச் சொல்லின் வகையறிதல் பொதுத்தமிழ் Tnpsc